“எல்லார்க்கும் எல்லாம்” - அறிக்கை வெளியிட்டு நூற்றாண்டு வளைவை திறந்து வைத்த முதலமைச்சர்!
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நூற்றாண்டு விழா வளைவு
திமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டிபிஐ வளாகத்திற்கு அவரது பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி க.அன்பழகனின் நூறாவது பிறந்தநாள் நிறைவடைந்ததையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு "பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்" என பெயர்சூட்டப்பட்டது.
முதலமைச்சர் மரியாதை
இந்நிலையில் டிபிஐ வளாகத்தில் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அன்பழகன் குடும்பத்தார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | ஆணும் பெண்ணும் சமம்.. கோலப்போட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சை பெண்கள்..!
அதற்கு முன்னதாக சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள்,சேகர்பாபு, அன்பில் மகேஷ் மற்றும் மேயர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.
எல்லாருக்கும் எல்லாம்
“எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயரப் பேராசியரின் 101-வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அறிக்கை வெளியிட்டுள்ளார். “ ஒவ்வொரு நாளும் உறங்கப்போகும் முன் தமிழின் மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப்பாரீர் “ என்ற பேராசிரியரின் வேண்டுகோளை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.