அன்வர் ராஜா பேசியிருப்பது தவறான கருத்து... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து...

தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாதே தோல்விக்குக் காரணமென முன்னாள் எம்பி. அன்வர் ராஜா பேசியிருப்பது தவறான கருத்து என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

அன்வர் ராஜா பேசியிருப்பது தவறான கருத்து... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து...
மதுரையில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி நடைபெற்ற ரத்ததான முகாமை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 
தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாததே தோல்விக்குக் காரணமென முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா பேசியிருப்பது தவறான கருத்து என செல்லூர் ராஜூ கருத்து  தெரிவித்துள்ளார்.  தலைவர்கள் பெயர் இல்லாமல் அதிமுக இல்லை. அன்வர் ராஜா கூறிய கருத்து தவிர்க்கபட வேண்டியது.
 
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை பெரிதாக வைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் படங்களை சிறிதாக வைத்து தான் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதுவே தோல்விக்கு ஒருகாரணமாகவும் அமைந்துவிட்டது. அதிமுகவின் தோல்வி எதிர்பாராதவிதமானது.
 
தோல்விக்கு பாஜக உள்ளிட்ட தோழமை கட்சிகள் காரணமல்ல. திமுக அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி ஆதாரங்களை. ஒதுக்கீடு செய்து நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். தடுப்பூசி கூடுதலாக ஒதுக்குவது,  தமிழகத்திற்கு  நிதி ஆதாரம் கோருவது,  3ம் அலை ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கையை மாநில அரசுடன் இணைந்து செயல்பட வலியுறுத்தி ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர்  பிரதமரை சந்தித்துள்ளனர்.
 
 ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர் கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலனை முக்கியம் என்ற அடிப்படையில் அதிமுக செயல்படும். மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி சிறுமைப்படுத்தினாலும் மத்திய அரசு தாரளமான முறையில் தடுப்பூசி வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.