நீட் தேர்வு விவகாரம்.. ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைப்பட்ட குழுவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரம்.. ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை தமிழ்நாடு அரசு  அமைத்தது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி பாஜக பொதுசெயலாளர் கரு. நாகராஜன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். யூகத்தின் அடிப்படையிலும், அரசியல் நோக்கதுடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

இதனிடையே இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக இணைக்க கோரி மாணவர்கள், திமுக, மதிமுக, சிபிஎம், விசிக மற்றும் ஆசிரியர் பிரின்ஸ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மாணவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், பாஜகவின் வழக்கு விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கத்திற்காக தொடரப்பட்டிருப்பதாகவும், அதில் பொதுநலன் இல்லை என்றும் வாதிட்டார். 

தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த வழக்கில் வாதாட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு ஜூலை8 ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டதோடு, இந்த வழக்கின் முக்கியதுவம் கருதியும், மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் தனிதனியாக வாதங்களை பெற வேண்டி இருப்பதன் காரணமாகவும் வழக்கின் விசாரணையை ஜூலை13 ம் தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.