இரண்டாம் தவணை தடுப்பூசி... முதலிடம் பெற்றது சென்னை...

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சென்னை முதலிடம்

இரண்டாம் தவணை தடுப்பூசி... முதலிடம் பெற்றது சென்னை...
இந்தியாவில் உள்ள 5 பெரிய நகரங்களில்,  சென்னையில் அதிகமானோருக்கு 2ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம் மூலமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  
 
இந்த நிலையில் சென்னை, மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத் என 5 பெருநகரங்களில், அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நகரம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்,  சென்னையில் இரண்டு தவணை தடுப்பூசிகளும் அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 
சென்னையில் 11% நபர்கள் 2ம் தவணை செலுத்தி உள்ளதாகவும், அடுத்தபடியாக பெங்களூரில் 10%, டெல்லி மும்பை ஆகிய நகரங்களில் தலா 7% மற்றும் ஹைதராபாத்தில் 5% பொதுமக்களும் தடுப்பூசி செலுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.