குடியரசுத் தலைவரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்காக இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 2-வது முறையாக டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்க உள்ள அவர், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன், துர்கா ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
முன்னதாக கடந்த ஜூன் 17,18 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.