தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்களது உடமைகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கடந்த 17 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து ஜி.பி.எஸ். கருவி, எரிபொருள் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதே போன்று ராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்த 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது என அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
மேலும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள், உடைமைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை காவலில் உள்ள 29 தமிழக மீனவர்கள், 82 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தியுள்ளார்.