பசும்பொன் பயணம் ரத்து...முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?

பசும்பொன் பயணம் ரத்து...முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?

முதுகுவலி காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

115 வது தேவர் குருபூஜை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை  115-வது தேவர் குரு பூஜை நடைபெறவுள்ளது. இந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு  அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்வார் என்று தகவல்கள் வெளியானது. 

மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர்:

இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முதலமைச்சருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், முதுகு வலி காரணமாக இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க: 3 கோவில்களை தாக்க திட்டம்? கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அதிச்சி தகவல்..!

பசும்பொன் பயணம் ரத்து:

இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மதுரை பயணத்தை ரத்து செய்துள்ளார். தேவர் குருபூஜையில் முதலமைச்சருக்கு பதிலாக, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, இ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மேற்கொள்ள இருந்த ஆய்வும் இதனால் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏமாற்றமடைந்த தொண்டர்கள்:

ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை விழாவில் ஸ்டாலின் பங்கேற்பது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் பசும்பொன் செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது தென் மாவட்ட தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.