பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா – ஒருவார காலம் பள்ளிக்கு விடுமுறை.
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துவந்தநிலையில் மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சிமுறையில் 50சதவீத மாணவர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிகள் நடைபெற்றுவருகிறது.
இதனிடையே அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டநிலையில், தற்போது திருச்சியிலும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு பயிலும் சாதனா என்ற மாணவிக்கு பள்ளி திறப்பன்று காய்ச்சல் இருந்ததையடுத்து அவருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு ஒருவாரகாலம் விடுமுறை அளித்து பள்ளி நிறுவனர் உத்தரவிட்டார். மேலும் , சகவகுப்பு மாணவிகளையும் பரிசோதனை மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.