மதுபானம் கொள்முதல் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்...நகல்களை சமர்ப்பிக்குமா டாஸ்மாக் நிர்வாகம்?

மதுபானம் கொள்முதல் தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்...நகல்களை சமர்ப்பிக்குமா டாஸ்மாக் நிர்வாகம்?

மதுபானங்கள் கொள்முதல் தொடர்பாக பதிலளிக்க, டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விவரங்களை கேட்டு விண்ணப்பித்த வழக்கறிஞர்:

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர், டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம், ஊழியர்களுக்கான சம்பளம், கடை வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்தும்,  மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது குறித்த விவரங்களை கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த 2015ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். 

மறுத்துவிட்ட டாஸ்மாக் நிறுவனம்:

இதனையடுத்து, மதுபானம் விற்பனை மூலம் கிடைத்த வருமானம், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறித்த விவரங்களை வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம், மூன்றாம் நபரின் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனவும், எந்தெந்த நிறுவனங்களிடம், எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வழங்க மறுத்து விட்டது.

இதையும் படிக்க: தமிழகத்தின் வரலாறு...முதலமைச்சரால் நடைபெறும் பணிகள் குறித்து...அறிஞர்கள் வரலாறு எழுதவேண்டும்...அமைச்சர் வலியுறுத்தல்!

நகல்களை சமர்பிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்:

இதை எதிர்த்து வழக்கறிஞர் லோகநாதன், கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இந்த விவரங்களை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பதற்கு காரணங்கள் உள்ளனவா? என்பதை கண்டறிய, மதுபானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக மது உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் நகல்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டாஸ்மாக் நிர்வாகம் அந்த விவரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை.

விசாரணை ஒத்திவைப்பு:

இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத டாஸ்மாக் நிர்வாகத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது? எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது? என்பது குறித்தான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், மதுபான நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சீல் வைக்கப்பட்ட கவரில் ஜனவரி 6ம் தேதி அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.