ஜூலை 12 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்னனென்ன ? முழு விவரம்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜூலை 12 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்னனென்ன ? முழு விவரம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி அனைத்து மாவட்டங்களிலும், ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.அந்த வகையில், அரசு மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும், இந்நிகழ்வுகள் நடத்துபவர்கள் கொரோனா பரிசோதனையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உட்கார்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவதாகவும்.தேநீர் கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம் என்றும்.,தகவல் தொழில்நுட்ப சேவை சார்ந்த நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் இடையே பயணிக்கும் இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள், உறைவிடங்களை பொறுத்தவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கலாம் என்றும் அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, மேலும் தமிழ்நாடு முழுவதும்  டாஸ்மாக் கடைககள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உரிய காற்றோட்ட வசதியுடன், ஒரே நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கலாம் என்றும், அனைத்து வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களை பொறுத்தவரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம் என்றும்,பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் அரசின் நெறிமுறைகளை பின்பற்றி செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளை பொறுத்தவரை 50 பேர் மட்டும் கலந்துகொள்ளலாம் என்றும், துக்க நிகழ்வுகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தொற்று முற்றிலும் குறையாததால் திரை அரங்குகள், பள்ளி-கல்லூரிகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், உயிரியல் பூங்காக்கள்.,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அரசியல் சார்ந்த கூட்டங்கள் அனைத்திற்கும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மாநிலங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.