ஏரியை அழித்து சாலையா? அப்படி ஒரு திட்டமே தேவையில்லை!

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஏரியை அழித்து சாலையா? அப்படி ஒரு திட்டமே தேவையில்லை!

பழைய மாமல்லபுரம் சாலை இரண்டாவது திட்டத்தை அமல்படுத்துவதற்காக, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம், செங்கல்பட்டு மாவட்டம், படூர் கிராமத்தில் உள்ள கல்லேரி எனும் ஏரியை மணல் மூலம் நிரப்புவதாகவும், இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, படூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஆக்கிரமிப்பு குறித்து விசாரணை நடத்த தாசில்தாரருக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளதாகவும், ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.

மாநில அரசு நீர் நிலையில் ஆக்கிரமிக்க கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் மேல்நிலை சாலை அமைக்கலாம் எனவும், இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

பின்னர், வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.