மாற்று இடம் வழங்கும் வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம்: சென்னை மாநகராட்சி உத்தரவு...

சென்னையில் கடந்த சில நாட்களாக நீர்நிலைகள் ஓரம் உள்ள குடிசை வீடுகளை அதிகாரிகள் அகற்றி வந்த நிலையில்,மாற்று இடம் ஒதுக்கும் வரை வீடுகளை அகற்ற வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மாற்று இடம் வழங்கும் வரை ஆக்கிரமிப்புகளை  அகற்ற வேண்டாம்: சென்னை மாநகராட்சி உத்தரவு...

சிங்காரச் சென்னையின் சீர்மிகு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நீர்நிலைகள் மற்றும் தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து குடிசை அமைத்து வசிப்பவர்களை அகற்றும் வகையிலும் சென்னையின் பல பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அரும்பாக்கம் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அங்குள்ள பக்கிங்காம் கால்வாயின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை அகற்றும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் மொத்தம் 270 வீடுகள் உள்ள நிலையில், அதில் 240 வீடுகளை அகற்றும் பணி தொடங்கியது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.மேலும் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், 25 வருடமாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் போக்கை வன்மையாக கண்டிப்போம் என அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகளும் களமிறங்கினர்.

 இந்த நிலையில் விவகாரம் பெரிதான நிலையில் நிலையில், அங்குள்ள மக்களை அகற்ற வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரையில், அவர்களை அப்புறப்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.