" திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் தமிழகமே போதையில் தள்ளாடி வருகிறது " - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

" திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் தமிழகமே போதையில் தள்ளாடி வருகிறது "  - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.


சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில், 22 ஆம் தேதி அதிமுக நடத்த உள்ள பேரணியின் இடம் மாற்றம் குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனு ஒன்றை அளித்தார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசிய அவர், 

"தமிழக அரசின் சாதனை என்று சொன்னால் தமிழக மக்கள் அனைவரையும் மதுவுக்கு  அடிமையாக மாற்றியது தான் சாதனை", என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். 

மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சாராயம் அருந்தியதால்  ஏற்பட்டுள்ள உயிரிழப்பு சம்பவம் மறையாத நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசின் டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்திய செந்தில் குமார் என்பவர் சுருண்டு விழுந்து உயிர் இழந்துள்ளதை பார்க்கும் பொழுது, தமிழக அரசு மதுபான கடைகளில் கலப்பட சரக்கு விற்பனை செய்யப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்திருப்பதாகத்  தெரிவித்துள்ளார். தொடர்ந்து,  கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குறித்தும், நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மதுபான கடையில் மது அருந்திய செந்தில்குமார் உயிரிழந்த விவகாரம் குறித்தும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலைமை தெரியவரும் என்றும் கூறினார். 

மேலும், தமிழக மின் துறை அமைச்சர் நிர்வாக ரீதியாக, துறையை மேம்படுத்த நினைக்காமல், எப்படியெல்லாம் ஊழல் செய்வது என ரூம் போட்டு ஆலோசித்து, அவற்றை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம் என்பது குறித்து திட்டமிடுவதால் தான், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாகவும் தமிழகத்தில் மின் துறையை கவனிக்க ஆள் இல்லாமல் ஆங்காங்கே மின்வெட்டு நிலவுவதாகவும் கூறினார். அதோடு,  அதிமுக ஆட்சியில் இருந்தபோது 24 மணி நேரமும் இடைவிடாமல் மின்விநியோகம் செய்யப்பட்டதாகவும்; ஆனால் அந்த நிலைமாறி இப்போது மின் வெட்டு அதிகரித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதையும் படிக்க    } கொரோனா தொற்றுக்கு பின் இளைஞர்கள் அதிகளவில் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர் - மா. சுப்பிரமணியன்!

அதனையடுத்து, தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக்  கண்டறிந்து அவர்களை குண்டாஸ் வழக்கில் கைது செய்திருந்தால் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் நிகழ்வு ஏற்பட்டிருக்காது எனவும்  சாடினார். திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் தமிழகமே போதையில் தள்ளாடி வருவதாகவும் விமர்சித்தார். 

மேலும், ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் கூறினார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை மாற்றி, எங்கும் பார் எங்கும் சரக்கு என தமிழகத்தையே திமுக அரசு மாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க    } பொறியியல் கலந்தாய்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி...!