நாகை அருகே நெகிழ்ச்சி... உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய சக காவலர்கள்...

நாகை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சுமார் 28 லட்ச ரூபாய் நிதி வழங்கிய சக காவலர்கள்.

நாகை அருகே நெகிழ்ச்சி... உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய சக காவலர்கள்...

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் பணிபுரிந்த பிரபாகரன் என்பவர் சாலை விபத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரம், கல்வி, மருத்துவச்செலவு மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு  பிரபாகரனுடன்  2003ம் ஆண்டு   காவல்துறையில் பணியில் சேர்ந்தவர்கள் உதவ முன்வந்தனர். 

இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள  மாநகர், மாவட்டம், சிறப்புபிரிவு  காவலர்கள் 5577 நபர்கள் சமூக வலைத்தளம் மூலம் ஒன்றிணைந்தனர். இதனையடுத்து தலா 500 ரூபாய் வீதம் மொத்தம்  இருபத்து ஏழு லட்சத்து என்பத்து எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் வசூல் செய்தனர். அந்த தொகை குடும்பத்தினரிடம் வழங்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

காவல்துறை உதவும்கரங்கள் நண்பர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபாகரனின் மகன்கள் பெயரில் 18,63,216  ரூபாய்,  பெற்றோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும் வகையில்  7,68,590 ரூபாய் காப்பீடு திட்டங்களில்  இரசீது மற்றும் காப்பீட்டு பத்திரங்களை காவல் துறை நண்பர்கள் பிரபாகரனின் குடும்பத்தினரிடம் வழங்கினர். இதேபோல் அவரது குடும்ப செலவிற்காக ஒன்றரை இலட்சம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தி அதற்கான ரசீதையும் அவர்கள் வழங்கினார். இது சம்பவம் நாகையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.