ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்ட பேரவையில் விளக்கம்...
ஆளும் கட்சியாக இருந்தாலும்,எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் நிலைப்பாடு ஒன்று தான் என ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் விளக்கம் அளித்தார்.
சட்டப்பரேவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு என்பற்கு பதிலாக சமீபகாலமாக ஒன்றிய அரசு என்று அழைப்பதை பார்க்கிறோம் என்றார். 19 -ம் நூற்றாண்டு பெண் கவி ஒருவர் எழுதிய கவிதையில் "Rose is a Rose is a Rose" என்ற வரி வரும். எப்படி அழைத்தாலும் அதன் ரோஸ் மணத்தை மாற்ற முடியாது. அதுபோல எப்படி அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிக்கவும் முடியாது, குறைக்கவும் முடியாது என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்டு விளக்கம் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், Rose is a Rose is a Rose என்பது ரோஸ் தான் என்றும் அது மல்லிகை என்று நாங்கள் சொல்லவில்லை எனவும், ஆனால் மாநிலங்களுக்கான உரிமை பற்றிய பேசியதில் முன்னோடி மோடிதான் என்றும் கூறினார். மேலும்,அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைக்கு குரல் கொடுத்தவர் என்றும், முதன்முறையாக ஜிஎஸ்டி மாநில அரசின் உரிமைகளை பறித்து கொள்ளும் என்றும் கூட அவர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.மேலும் திமுகவை பொறுத்தவரை எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் தங்களின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.