முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்துதள்ளிய உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்...

முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க பொருளாதார ஆலோசனைக்குழு அமைப்பு குறித்து  ஸ்டாலினை புகழ்ந்துள்ளார் உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்.

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்துதள்ளிய உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர்...
திமுக அரசு பதவியேற்ற பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று கூடியது.  முதல்நாள் கூட்டத்தில் தமிழக ஆளுநர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் முதலமைச்சருக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். 
 
இதுகுறித்தான ஆளுநர் உரையில், ”வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதலமைச்சருக்கு ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்.
 
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ, மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ், மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர். இவர்கள் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள்” என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பை உலக உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டி வரவேற்றுள்ளார்.
 

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு, “இது சிறப்பான செய்தி. தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகள். அகில இந்திய கொள்கை வகுப்பிலும் இந்த நபர்களின் கருத்துகள் இருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் எட்டிய உச்சத்துக்கு மீண்டும் திரும்பும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.