தமிழகத்தில் முதல் முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிக்கும் பெண் காவலர்கள்..!!

தமிழகத்தில் முதல் முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிக்கும் பெண் காவலர்கள்..!!

கொலை,கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறும் போது குற்றவாளிகளை அடையாளம் காண காவல்துறையினருக்கு  உதவியாக மோப்ப நாய்கள் பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

குற்றச் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கபட்டு அங்கு கிடைக்கும் தடயங்களை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது.  நாயின் வேகத்திற்கு ஏற்ப ஓடும் வகையில் ஆண் காவலர்கள் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து கையாண்டு வருகின்றனர்.  இந்நிலையில்   தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகர காவல்துறையில்  மோப்ப நாய்களை கையாள்வதற்காக இரு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் கவிப்பிரியா , பவானி , ஆகிய இரு பெண் போலீசார், தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.  ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு, மோப்ப நாய்களைக் குற்ற சம்பவம் நடக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள்.  இவர்களில் காவலர் கவிப்பிரியா.  திருப்பூர் மாநகரில் உள்ள செல்லம் நகரை சேர்ந்தவர்.  பிஎஸ்சி (இயற்பியல்), பிஎட், பிஏ (இந்தி) மற்றும் மனித வளத்தில் டிப்ளமோ படித்துள்ளார்.  காவலர் பவானி ,
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.ஏ ஆங்கிலம் இலக்கியம் முடித்துள்ளார்.
கோவை காவலர்  பயிற்சி பள்ளியில் இருவரும் பயிற்சி பெற்றுள்ளனர்.  பயிற்சிக்குப் பிறகு, கோவை நகர ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவலர் கவிப்பிரியா  கூறுகையில் எனக்கு  செல்லப்பிராணிகள் மிகவும் பிடிக்கும் எனவும் பயிற்சியில் இருந்தபோது, கோவை மாநகரில் உள்ள துப்பறியும் நாய்ப் படை மற்றும் நாய்ப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் மோப்ப நாய்களை வரவழைத்து அவற்றின்  திறன்களைக் காட்டினர் எனத் தெரிவித்த அவர் அப்போதே எனக்கு ஆர்வம் அதிகமானது எனவும் இந்த நேரத்தில் தான்  துப்பறியும் நாய்களைக் கையாள விரும்புகிறீர்களா என அதிகாரிகள் கேட்டார்கள் எனக் கூறிய கவிப்பிரியா உடனே, நாய்களைக் கையாளும் விருப்பத்தைத் தெரிவித்தேன் எனக் கூறினார்.   இதனை தொடர்ந்து என்னை இந்த பிரிவில் சேர்த்தனர் எனவும் இதே போல் என்னுடன் பணி புரியும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  பவானியும் விருப்பம் தெரிவித்ததால் இருவருக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார் காவலர் கவிப்பிரியா.

மாநகர காவல் ஆணையர் அலுவலக கட்டிடத்தில்  அமைந்துள்ள துப்பறியும் நாய் படை மற்றும் நாய் பயிற்சி மையத்தில் பெண் காவலர்  கவிப்பிரியாவுக்கு மோப்ப நாய் வில்மாவிற்கு பயிற்சி அளிக்கும் பணியும்  (குற்றம் மற்றும் கொலை குற்றவாளிகளை கண்டறியும் நாய்)  பெண் காவலர் பவானிக்கு மோப்ப நாய் மதனாவிற்கு பயிற்சி அளிக்கும் பணியும் (போதைப்பொருளை கண்டறியும் பணி) வழங்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு மே 1ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறுகையில் ஆண் காவலர்கள் மட்டுமே துப்பறியும் நாய்களைக் கையாள்பவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.  பெண் காவலர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்து, இரண்டு பெண் காவலர்களை தேர்வு செய்து மோப்ப நாய்களைக் கையாள்பவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதே போன்று காவல் ஆணையரின் அதிவிரைவு  படையிலும் மூன்று பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  யுபிஎஸ்சி தேர்வில் முதல் நான்கு இடங்களிலும் பெண்கள்...!!!