தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்... ராஜேந்திர பாலாஜி வேதனை

பொதுவாக நான் அப்படிலாம் பேசற ஆளு கிடையாதுங்கன்னு கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தடித்த வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக வருத்தப்படுகிறேன்... ராஜேந்திர பாலாஜி வேதனை
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் பேசினாலே தடாலடியாகத்தான் பேசுவார். ஒவ்வொரு பேட்டியின் போதும் அவர் பேசும் பேச்சுக்கள் பெரும்பாலும் சர்ச்சையானதாகவே இருக்கும். கடந்த பத்தாண்டுகாலமாக அமைச்சராக இருந்தவர், சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். சொந்த  தொகுதியிலேயே ஆகாதவர்கள் என்று பலர் இருந்தனர். அதிமுக எம்எல்ஏவாக இருந்த ராஜவர்மன் இவராலேயே கட்சியை விட்டுவிலகுவதாக அறிவித்த விலகவும் செய்தார்.
 
ஆட்சியும் பறிபோய், தேர்தலில் தோல்வியும் அடைந்த பிறகு எங்கிருக்கிறார் என்று தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அந்த அறிக்கையில்,
 
“எனக்கு கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமையில் உள்ளேன். அடுத்த சில நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம். கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுகிறேன் எனக் கூறியிருக்கிறார்.
 
அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி வரும் பொய், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும், அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டுள்ளேன். செயல்பட்டும் வருகிறேன். சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் கழகத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். துரோகத்தையும் சூழ்ச்சியையும் முறியடிப்போம். ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.