ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அன்னதானம்...

தமிழகத்தில் உள்ள கோயில்களில் இலையில் வைத்து அன்னதானம் வழங்கும் நடைமுறை இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அன்னதானம்...

தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 16-ம் தேதி திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பந்தியில் இலையில் பரிமாறப்படாமல் உணவுப்பொட்டலங்களாக வழங்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இன்று முதல் கோயில்களில் உள்ள அன்னதானக் கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு பந்தியிட்டு இலையில் அன்னதானம் பரிமாறப்பட்டு வருகிறது.

அதன்படி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இலையில் அன்னதானம் பரிமாறப்படும் எனவும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் உணவுப் பொட்டலங்களாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே  திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் 18 மாதங்களுக்குப் பிறகு இன்று அன்னதானம் இலையில் வழங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.