பாவலரை கம்யூனிஸ்ட்காரங்க காப்பாத்தல... கங்கை அமரன் ஆதங்கப் பேச்சு...
அண்ணன் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்து அழைத்து சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு தெரியவில்லை. ஒருத்தர் கூட அண்ணனை காப்பாற்றவில்லை.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 92-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி மாநில பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் எதிரில் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி தேசிய நல்லாட்சி தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும், இயக்குநரும், இசையமைபபாளரும், தமிழக பாஜக நிர்வாகியுமான கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன் கூறியதாவது:-
பாஜகவுக்கு பெரிய பிளஸ் என்வென்றால் கடவுள் உண்டு என்பதுதான். கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சுற்றுகின்ற, சாமி சிலைகளை அவமதிக்கின்ற ஆட்கள் பாஜகவில் கிடையாது. முதலில் கம்யூனிஸ்ட் கட்சி பிரபலமாவதற்கு தஞ்சாவூர் பகுதியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், மதுரை பகுதியில் பாவலர் வரதராஜனும் தான் முக்கிய காரணமாகும். உழைக்கும் மக்களின் விஷயங்கள், பஞ்சங்கள், பசியை பற்றி பாடி பிரபலப்படுத்தியவர்கள் அவர்கள்தான். அதற்கு பிறகு தான் விவசாய சங்கங்கள் எல்லாம் உருவானது.
கம்யூனிஸ்ட் கட்சியை தவிர வேறு இல்லை என்று எண்ணிக்கொண்டு இருந்த நேரத்தில் எனது அண்ணன் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்து அழைத்து சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு தெரியவில்லை. ஒருத்தர் கூட அண்ணனை காப்பாற்றவில்லை. அதன்பிறகு எங்கள் குடும்பத்தில் அரசியலில் யாரும் இல்லை. இப்போது கட்சியில் இருக்கும் ஒரு ஆள் நான்தான் என்று கங்கை அமரன் பேசினார்.