அம்பேத்கரை இழிவு படுத்துகிறார் ஆளுநர்...! சிந்தனைச்செல்வன்...!

அம்பேத்கரை இழிவு படுத்துகிறார் ஆளுநர்...! சிந்தனைச்செல்வன்...!

அம்பேத்கரை ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவு படுத்துவதாக விசிக சட்டமன்ற குழுத் தலைவர் சிந்தனைச்செல்வன் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக அரசு சார்பில் அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த  தீர்மானத்தை வரவேற்று பேசிய அவர், "இந்த அவையின் இறையாண்மையை  மறுப்பது என்பது ஜனநாயகத்தை மறுப்பதாகும். ஜனநாயகத்தையும் பன்மை தன்மையையும் பாதுகாக்கிற அரசியல் சாசனத்தை மறுப்பதாகும்.மதச்சார்பின்மைக்கும், சமூக நீதி என்ற கோட்பாட்டுக்கு எதிராகவும் வெளிப்படையாக ஆளுநர் பேசி வருவது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது. பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின் தூண்டுதலுக்கு அம்பேத்கர் இரையானார் என்று ஆளுநர் மாளிகையிலேயே ஆளுநர் பதிவு செய்து,  அம்பேத்கரை இழிவு படுத்துகிறார்" எனக் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசுகையில்  "தமிழ்நாடு இன்று மாநில சுயாட்சிக்கான மகத்தான யுத்தத்திலே களத்தில் நின்று கொண்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமையை பாதுகாப்பதற்கான மாபெரும் யுத்தத்தை,  இரண்டாவது விடுதலைப் போராட்டத்தை, தமிழ்நாடு நடத்த வேண்டி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். 

மேலும் "ஆதாயம் பெறுகின்ற வேறு எந்த பதவியும் கவர்னர் வகிக்க கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகச் சொல்கிறது. ஆனால் ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பில் தலைவராக ஊதியம் உள்ள ஒரு பதவியை ஆளுநர் வகித்து வருகிறார். அந்தப் பதவியை ஆளுநராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில்  ஆர்.என். ரவி பெறுகிறார் எனும்போது அரசியல் சாசனத்திற்கே விரோதமாக ஆளுநர் செயல்பட்டு இருக்கின்றார்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:.. ஆளுநரை கண்டித்து தீர்மானம்...! பேரவையில் நிறைவேறியது...!! - https://www.malaimurasu.com/posts/tamilnadu/condemns-governor-legislative-approved