சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு தக்காளி மற்றும் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும்: வியாபாரிகள் எச்சரிக்கை...

சென்னையில், அடுத்த 10 நாட்களுக்கு தக்காளி மற்றும் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு தக்காளி மற்றும் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும்: வியாபாரிகள் எச்சரிக்கை...

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தக்காளி வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு காய்கறி சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் வரத்து அதிகரிப்பால் அதன் விலை சரிந்து கிலோ 40-ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து ஒரு கிலோ தக்காளி கிலோ 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி மட்டுமின்றி புடலங்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்களின் விலையும் கடுமையாக உயர்ந்து கிலோ 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர் மழை காரணமாக காய்கறி தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். தட்டுப்பாடு நீங்கி காய்கறிகளின் விலை கட்டுக்குள் வர இன்னும் 10 நாட்களுக்கு மேல் ஆகும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.