6 லட்சம் கடனுக்கு 14 லட்சம் வட்டி கட்டிய அவலம்: கேட்டும் பணம் தரவிட்டால் மகளை கடத்தி விடுவோம்னு மிரட்டிய கொடூரம்...
காஞ்சிபுரத்தில் கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை என்றால், பெண் பிள்ளையை கடத்தி விடுவோம் என மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள, ராஜவீதியை சேர்ந்த பத்மாவதி என்பவர், திருமுக்கூடலைச் சேர்ந்த பார்கவி என்பவரிடம், கடந்த 2019-ம் ஆண்டு 6 லட்ச ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வட்டி கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடன் கொடுத்த பார்கவி, தன்னிடம் சீட்டு பணம் கட்டி, அதில் வரும் பணத்தில் வட்டி கட்ட வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
வேறு வழியின்றி அதற்கு சம்மதித்து வட்டி கட்டி வந்தும், கடனை அடைக்க முடியாமல் தவித்த பத்மாவதி, தொழிலுக்கு பயன்படுத்தி வந்த லாரியையும் வட்டிக்காக அடமானம் வைத்துள்ளார். மேலும், 10 பவுன் தங்க நகையையும் வட்டிக்கு பணம் கட்டி இழந்துள்ளார். இப்படி 6 லட்ச ரூபாய் கடனுக்காக 14 லட்சம் ரூபாய் வரை வட்டி மட்டுமே கட்டி வந்துள்ளார் பத்மாவதி.
இந்த நிலையில் வாங்கிய பணத்தை முழுவதுமாக கட்டுமாறு வற்புறுத்தி வந்த பார்கவி, பணத்தை செலுத்தவில்லை என்றால் பத்மாவதியின் 11 வயது மகளை கடத்தி சென்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பத்மாவதி அளித்த புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.