மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வினாடிக்கு 13 ஆயிரத்து 477 கன அடியாக இருந்த அணையின் நீர் வரத்து இன்று 39 ஆயிரத்து 634 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டமும் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. நேற்றுவரை 95 புள்ளி 10 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 97 புள்ளி 80 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 62 புள்ளி 02 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து 650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 2 அடி வீதம் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், நாளைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.