கர்நாடகாவில் மேகதாதுவில் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா?- ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு...

கர்நாடகாவில் மேகதாதுவில் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா?- ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு...

கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அருகே பெங்களூர் நகருக்கு குடிநீர் சப்ளை செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

மேகதாதுவில் இந்த அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலின்றியும்,  எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமான பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. 


மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், வன விலங்குகள் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது..

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் அமர்வு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், தமிழக, கர்நாடக அரசுகளும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.. 

மேலும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் பணிகள் நடைபெறுகிறதா என்பதையும், அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மூத்த அதிகாரி, காவிரி நீர் மேலாண்மை ஆணைய மூத்த அதிகாரி அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இக்குழு ஜூலை 5ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.