இன்று இங்கெல்லாம் கனமழை பெய்யும்!
வெப்ப சலனம் காரணமாக தமிழக வட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் மற்றும் தமிழகத்தின் தென் கடலோரம், குமரிக்கடல் - இலங்கை மற்றும் கர்நாடகம்- தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.