ஆபாச வீடியோ விவகாரம்- பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜோதிமணி எம்.பி புகார்...

ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகார் அளித்துள்ளார்.

ஆபாச வீடியோ விவகாரம்-  பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜோதிமணி எம்.பி புகார்...

சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு-வை சந்தித்து பா.ஜ.க பொதுச் செயலாளராக இருந்து தற்போது ராஜினமா செய்துள்ள கே.டி ராகவன் குறித்த பாலியல் ஆபாச வீடியோ விவகாரத்தில் நடவடிக்கை வேண்டி புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய எம்.பி ஜோதிமணி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பில் இருந்த கே.டி ராகவன் குறித்து ஆபாச வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் கே.டி ராகவனை முறையாக கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இதுபோன்று பா.ஜ.க நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் சர்ச்சைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இவைகளை தட்டிக் கேட்காமல் பா.ஜ.க தலைவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள் எனவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க-வினருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மூலம் பா.ஜ.க-வினரால் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது வெளிவந்துள்ளதாகவும், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலை தொடர்கதையாகி வருவதாகவும், பா.ஜ.க-வில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த அரசில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும் என முதலமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளதன் அடிப்படையில் காவல்துறை இயக்குநரை சந்தித்து முறையாக புகார் அளித்துள்ளோம் என்ற அவர், பெண்களுக்கு தேவையான ஞாயங்கள் இந்த ஆட்சியில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கே.டி ராகவன் உட்பட பா.ஜ.க-வினர் யார் யாரால் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தி உரிய ஞாயத்தை பெற்றுத் தரவேண்டும் எனவும் இது போல் அடுத்தடுத்து எத்தனை வீடியோ வந்தாலும் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழக காவல்துறை இயக்குநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.