16 ஆண்டுகளுக்கு பின் வெகுவிமர்சையாக நடைபெற்றது...பழனி கோவில் கும்பாபிஷேகம்!

16 ஆண்டுகளுக்கு பின் வெகுவிமர்சையாக நடைபெற்றது...பழனி கோவில் கும்பாபிஷேகம்!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி  கோயில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பழனி கோவில் கும்பாபிஷேகம் :

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் கடந்த 23ம் தேதி யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. இதற்காக 90 யாக சாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க எட்டு கால பூஜைகள் கடந்த நான்கு நாட்களாக மலைக்கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை தண்டாயுதபாணி  உபக்கோயில்களான இடும்பன் கோயில், பாத விநாயகர், கிரிவல பாதையில் உள்ள  ஐந்து மயில்கள்  உட்பட 83 கோவில்களுக்கு  நேற்று காலை வெகு முயற்சியாக குடமுழுக்கு  நடைபெற்றது.

இந்நிலையில் காலை மலைக்கோயில் பிரகாரத்தில் உள்ள ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கங்கை, காவேரி உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், யாக சாலைகளில் வைக்கப்பட்டு 108 சிவாச்சாரிகள், 108 ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தன் அலங்காரம் என முருக கடவுளை தமிழில் பூஜை செய்தனர். அதன்பின் புன்னிய நீரானது எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு பூஜை நடைபெற்றது. 

கலசங்களில் புனித நீர் ஊற்றப்படுவதை காண மலைக்கோயில் பிராகாரத்தில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  அரோகரா சரண கோஷத்துடன் கோபுரத்தை கண்டு வழிபட்டனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோயில் தங்க விமானம் மற்றும் குழுமியிருக்கும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் பூக்கள்  தூவப்பட்டது.

இதையும் படிக்க : அதிமுக தேர்தல் பணிக்குழுவில்... கூடுதலாக 5 பேர் இணைப்பு...!

தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை மூலம் மலை கோயில் வந்த பக்தர்கள் காணும் வகையில்  கிரிவல வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் மெகா எல்.இ.டி திரைகள்  மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மலைக்கோவில் வளாகத்தில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுவதை தவிர்க்க குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் யானை பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட திட்டமிட்ட நிலையில், இரண்டு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவில் சேகர்பாபு, சக்கரபாணி, ஐ. பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்த உடன் நண்பகல் 11 மணிக்கு அனைத்து பக்தர்களையும் மலைக்கோயிலில் அனுமதிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

16 ஆண்டுகளுக்குப் பின்பு பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் பழனி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.