21 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் லட்சுமணன் உடல் நல்லடக்கம்...!

21 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் லட்சுமணன் உடல் நல்லடக்கம்...!

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசியல் கட்சியினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இராணுவ வீரர் லட்சுமணன்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் தும்மக் குண்டு அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் - ஆண்டாள் தம்பதி. இவர்களுக்கு இரட்டையர்கள் குழந்தைகளாக பிறந்தவர். அதில் ஒருவர் தான் இராணுவ வீரர் லட்சுமணன். இவர் இராணுவத்தின் மீதுள்ள பற்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக பணியாற்றி வந்தார்.

தீவிரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீர மரணம்:

ஜம்மு காஷ்மீர் எல்லையில் ரஜோரி ராணுவ முகாமில், நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அப்போது இரு தரப் பினருக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் தமிழக வீரர் லட்சுமணன் உட்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர். 

விமான நிலையத்தில் அஞ்சலி:

பயங்கரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த லட்சுமணனின் உடலுக்கு ஜம்மு-காஷ்மீரில் உள்ள உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின் இன்று காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் கலோன், போலீஸ் சூப் பிரண்டு சிவ பிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி உள்ளிட்டோர் அவரின் உடலுக்கு தேசியக்கொடி அணிவித்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பெற்றோர்கள் உறவினர்கள் அஞ்சலி:

மதுரை விமான நிலையம் வந்தடைந்த லட்சுமணன் உடல், அங்கிருந்து ராணுவ வாகனத்தில் அவருடைய சொந்த கிராமமான டி.புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு பொற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்தியதோடு அஞ்சலியும் செலுத்தினர்.

இறுதி ஊர்வலம்:

பெற்றோர்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து, இராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இறுதி ஊர்வலத்திற்காக எடுத்து செல்லப்பட்டது. லட்சுமணனனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர். அத்துடன் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று மரியாதை செய்தனர்.

இராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்:

இறுதி ஊர்வலத்தையடுத்து இராணுவ வீரரின் உடல் நல்லடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இந்திய ராணுவத்தின் சார் பில் 21 குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் லட்சுமணனின் உடல் அவரது சொந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.