ஊரடங்கு எதிரொலி: குறைந்து வரும் கொரோனா பரவல்

ஊரடங்கு எதிரொலி: குறைந்து வரும் கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.


தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 28 ஆயிரத்து 864 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 68 ஆயிரத்தை கடந்துள்ள சூழலில், தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 5 ஆயிரத்து 546ஆக  அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 493 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  இதன்மூலம், தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 754ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 982 பேர் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை,  சென்னையில்  புதிதாக 2 ஆயிரத்து 689 பேருக்கும், கோவையில் 3 ஆயிரத்து 537 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கூறியுள்ளது.