கனிமவள கொள்ளை : மறுமலர்ச்சி இயக்கம் மனு - 24-ம் தேதி தள்ளிவைத்த நீதிமன்றம்!!!
சிறப்பான தட்பவெட்ப நிலைக்கு பெயர் போன கோவை மாவட்டத்தில் கல் மணல் போன்ற கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள அனுமதி கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் செட்டிபாளையம் மலுமச்சம்பட்டி, ஒத்தக்கல் மண்டபம், பிச்சானூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக்கத்துக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பித்ததாகவும், போக்குவரத்து நெரிசல், மக்கள் நடமாட போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி பிரச்சாரத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள் - பால்வளத்துறை அமைச்சர் பேட்டி
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து விளக்கம் அளிக்க மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து அரசு தரப்பில் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்கும்படி மனுதாரர் அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையை மே 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.