"அவர்களை அனுசரித்து தான் செல்ல வேண்டும்...” - அமைச்சர் கே.என்.நேரு

"அவர்களை அனுசரித்து தான் செல்ல வேண்டும்...” - அமைச்சர் கே.என்.நேரு

மழைநீர் தேங்கிய இடம் - அமைச்சர் பார்வை :

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் தேங்கிய மழை நீரை மின்மோட்டார் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் அமைச்சர் கே என் நேரு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

செய்தியாளர் சந்திப்பு :

இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு, தண்ணீர் தேங்கும் இடங்களில் மோட்டார் பம்பு மூலமாக அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கல் வாரியதுடன் இணைந்து பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைந்து, சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னது போல் மக்கள் துயரம் நிரந்தரமாக நீங்கும் என தெரிவித்தார். மேலும், மசூதி காலனி, ராஜமன்னார் காலனி பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. ஆனால் தற்போது தண்ணீர் தேங்கவில்லை அதை பார்வையிட இருக்கிறோம். 

ஒரு மணிநேரத்தில் மழைநீர் அகற்றம் :
 
இன்று காலை அடையாறில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒரு மணி நேரத்தில் தண்ணீரை வடியும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வடியாத இடத்தில், மட்டும் தான் மோட்டார் பம்புகளை வைத்து அகற்றி வருகிறோம். அப்படி மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பகுதிகளில் வடிகால் அமைத்து நிரந்தரமாக தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

’அனுசரித்து செல்ல வேண்டும்’ : 

மேலும், வடசென்னை பகுதியில் இரண்டு இடங்களில் மட்டும், அதுவும் அங்கு மழைநீர் வடிகால் இல்லாத காரணத்தினால் தண்ணீர் தேங்கியதாகவும் அதையும் வெளியேற்றி வருகிறோம் எனவும் தெரிவித்தார். பின்னர் ஒப்பந்ததாரர் குறித்து செய்தியாரளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒருமுறை தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. மூன்று முறை நோட்டீஸ் அளிக்க வேண்டும், அது மட்டும் இன்றி ரத்து செய்த பின்பு மீண்டும் டெண்டர் விட வேண்டும். அப்படி விடும் பொழுது நிதி பத்து சதவீதம் அதிகரித்து விடும். இதன் காரணமாக ஒப்பந்ததாரரை பணி முடியும் வரை அனுசரித்து செல்ல வேண்டும். 

ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் :

அனுசரித்து செல்ல வேண்டும் என்றால் ஆள் பற்றாக்குறையாக இருந்தால் அல்லது அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அவர்கள் தேவையை பூர்த்தி செய்து அவர்களை வைத்தே பணி செய்து முடிக்க வைப்பது தான். மீண்டும் டெண்டர் விடப்பட்டால் மூன்று மாதங்கள் எடுக்கும். இதனால் மூன்று மாதங்கள் பணி நின்ற விடும் சூழலால் பணிகள் தாமதம் ஆகும் என தெரிவித்தார்.
தொடர்ந்து சென்னை வடுவாங்கரை, மசூதி சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியையும், கேகே நகர், ராஜமன்னார் சாலையில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீர் அகற்றும் பணியையும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிக்க : காங்கிரசுக்கு இருக்கும் அக்கறை கூட அதிமுகவிற்கு இல்லையா? 10% இடஒதுக்கீடு இரட்டை வேடமா?