மிருகங்களைப் போல அறிவுஜீவிகளை வேட்டையாடுகிறது மோடி அரசு..! திருமாவளவன் விமர்சனம்.! 

மிருகங்களைப் போல அறிவுஜீவிகளை வேட்டையாடுகிறது மோடி அரசு..! திருமாவளவன் விமர்சனம்.! 

மனித உரிமை போராளி ஸ்டேன்சாமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஸ்டேன் சாமி மரணம் மோடி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது மரணத்திற்கு மோடி அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்" எனக் கூறினார்.  

பின்னர் மேடையில் பேசிய திருமாவளவன் "ஸ்டேன் சாமி மரணம் என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூர மரணம். அவரது மரணத்திற்கு மோடி அரசே முழு பொறுப்பு. காடுகளில் மிருகங்களை வேட்டையாடுவதை போல மோடி அரசு நாட்டில் உள்ள அறிவு ஜீவிகளை வேட்டையாடுகிறது. இந்துத்துவத்தை எதிர்த்து பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், சனாதனத்தை எதிர்ப்பவர்களையும் குறி வைத்து பாஜக அரசு கைது செய்து வருகிறது

மோடி அரசின் ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவான நிலையை எதிர்த்து மக்கள் நலனை மட்டுமே ஸ்டேன் சாமி ஆதரித்தார் என்பதற்காக கைது செய்து சிறையில் அடைத்தது பாஜக அரசு.மோடி அரசின் பாசிசத்தை நாம் வேரறுத்தாக வேண்டும். இடதுசாரி சிந்தனையாளர்களை அழித்தொழிக்க நினைக்கிறது பாஜக. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மோடியே பதவி விலகு என்ற முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.