நீட் தேர்வு நடக்குமா நடக்காதா? மருத்துவப் படிப்பு சேர்க்கை நடைபெறுமா? மாணவர்கள் குழப்பம்!!

நீட் தேர்வு நடக்குமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்!!

நீட் தேர்வு நடக்குமா நடக்காதா? மருத்துவப் படிப்பு சேர்க்கை நடைபெறுமா? மாணவர்கள் குழப்பம்!!

அதிமுக ஆட்சியின் போது நீட் தேர்வை ரத்து செய்வது தான் எங்கள் நிலைப்பாடு என எடப்பாடி பழனிசாமியும், தற்போது திமுக ஆட்சியில் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என ஸ்டாலினும் கூறி வரும் நிலையில், ஒரு வருடமாக பள்ளி செல்லாமல் பொதுத் தேர்வு எழுத முடியாமல் தவித்து வரும் மாணவர்களுக்கு இந்த வருடம் நீட் தேர்வு இருக்குமா இருக்காதா? என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.                  ஒரு புறம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து விசாரணை மேற்கொள்ள குழு அமைக்கப்படும் எனக் கூறியிருக்கிறார். மறுபுறம் அமைச்சர் மா.சுப்ரமணியன், நீட் தேர்வு தாக்கம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

அக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இயற்றப்படும் தீர்மானம் குடியரசுத் தலைவராலோ, உச்சநீதிமன்றத்தாலோ நிராகரிக்க முடியாத வகையில் இருக்கும் எனக் கூறியிருக்கிறார். எனினும் ஒரு வேளை நீட் தேர்வு நடத்தப்படும் சூழல் ஏற்பட்டால் மாணவர்கள் அதற்கு தயாராக வேண்டுமென ஒரு குண்டையும் போட்டுள்ளார்.     எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, அரசு அமைத்த ஆணையத்தின் பரிந்துரைகள் வரும் முன்பு மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை தெளிவு படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். 

ஒரு ஆண்டாக பள்ளி செல்லாமல் பொதுத் தேர்வு எழுதாமல், பாடங்களை சரிவர முடிக்க முடியாமல் திணறி வரும் மாணவர்கள், சரியான வழிகாட்டுதல் இல்லாமலும், நீட் தேர்வு இருக்கும் இல்லை என்ற உறுதியான தகவல் இல்லாமலும் அல்லாடி வருகின்றனர்.