உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...

வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், அப்பகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை...

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், இன்று மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்,

வரும் 9-ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, குறிப்பிட்ட பகுதிகளுக்கு வரும் 9-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.