ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்-ஸின் தயவு திமுகவுக்கு தேவையில்லை - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்-ஸின் தயவு திமுகவுக்கு தேவையில்லை - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

வேலூரில் இன்று புதிய பேருந்து நிலையத்தை  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் திமுகவுக்கு சம்பந்தமில்லை என்றும், பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி இருவரும் ஒன்று தான் எங்களுக்கு இருவரின் தயவும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தை துவங்கி வைத்தார் அமைச்சர் துரைமுருகன்:

வேலூரில் புதிய பேருந்து நிலையம் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால்  கடந்த மாதம் துவங்கப்பட்டது. இந்தநிலையில் இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து  போக்குவரத்தை துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகனுடன், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆணையர் அசோக்குமார்,.மேயர் சுஜாதா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அதிமுக தயவு திமுகவுக்கு தேவையில்லை :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக அலுவலகத்தில் சீல் வைத்த விவகாரத்தில் திமுகவுக்கு சம்பந்தமில்லை. பன்னீர் செல்வமும் எங்களுக்கு ஒன்று தான் பழனிசாமியும் ஒன்றுதான். எங்களுக்கு இருவரின் தயவும் தேவையில்லை என்று கூறினார்.  

ஆளுநர் ஒரு சனாதனவாதி:

தொடர்ந்து பேசிய அவர்,  மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனை பின்பற்றவில்லை.  அதனால் தான் அரசு புறக்கணித்தது என்றார். மேலும், ஆளுநர் குறித்து பேசிய அவர், ஆளுநர் ஆர்என்.ரவி ஒரு சனாதனவாதி என்பதால் சனாதன தர்மம் பற்றி பேசுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை என குற்றம் சாட்டுபவர்களில் நானும் ஒருவன்:

தொடர்ந்து கொரோனா பரவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த துரைமுருகன், தமிழ்நாட்டில் கொரோனா கட்டுபாட்டில் இருந்தது ஆனால் இப்போது கட்டுபாட்டை மீறி வருகிறது ஆனாலும் பழைய வேகமில்லை கொரோனா பாதிக்கபடுபவர்கள் இரண்டு நாட்களில் சரியாகி விடுகின்றனர் என கூறியுள்ளார். மேலும் ஸ்மார்ட் சிட்டி குறித்த கேள்விக்கு, ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை என குற்றம் சாட்டுபவர்களில் நானும் ஒருவன். அதற்கு மாநகராட்சி ஆணையரும் மாவட்ட ஆட்சியரும் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி முடித்தார்.