23 பேர் மட்டுமே மறு தேர்விற்காக விண்ணப்பம்... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்...

12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டுமே மறு தேர்விற்காக விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

23 பேர் மட்டுமே மறு தேர்விற்காக விண்ணப்பம்... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்...
சென்னை தலைமைச் செயலகத்தில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு எழுதுக இயக்கம் சார்பில் நான்காம் வகுப்பு மாணவி முதல் கல்லூரி மாணவர்கள் வரை எழுதிய 100 புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெற்றுக் கொண்டார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
 
மூன்று மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகவும், வரும் நாட்களில் மருத்துவ வல்லுநர்களுடன் மேற்கொண்ட பின்பே பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என அவர் கூறினார்.
 
மேலும், 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டுமே மறு தேர்விற்காக விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், 12ம் வகுப்பு  தேர்வெழுத தனித்தேர்வர்கள் 45 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பத்துள்ள நிலையில், அதில் 313 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் என்றும், அவர்களுக்கு விலக்களிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
 
தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதன்படி பொருளாதாரம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து 75% பாதிக்கப்படாத பெற்றோர்களிடம் 85% கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக ஆதாரத்துடன் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
 
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். ஆசிரியர் தகுதி தேர்வை ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நடத்துவது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுப்பு நடைப்பெற்று வருவதாகவும்,  விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார்.