பெங்களூரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்ற கும்பல்..! அலேக்கா தூக்கி சிறையில் அடைத்த போலீசார்..!
பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் காஞ்சி நகரைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தன்னுடைய சரக்கு வண்டியில் கொண்டு வந்துள்ளார். அதனை தேவேந்திரன் மற்றும் அவருடைய நண்பர்களான ஏ.அரஸ் மொய்தீன், முகமது ஆஷிக் ஆகியோர் இணைந்து உக்கடம் அருகே உள்ள லாரிப்பேட்டையில் வைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விற்பனை செய்வதற்காக பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் போலீசாருக்கு அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் எழுந்ததால், உடனடியாக அவர்களின் வாகனத்தை பரிசோதனை செய்தனர்.
அதில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததால் சம்பவ இடத்திலேயே வைத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.