இ.பி.எஸ்., சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு... காவல்துறை பதிலளிக்க உத்தரவு...

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரிய வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இ.பி.எஸ்., சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு... காவல்துறை பதிலளிக்க உத்தரவு...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில் ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர். கொடநாடு வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல்போன பொருட்கள் எவை? என்பது குறித்து சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் என்றும், வெளிப்படையான விசாரணையை புலன் விசாரணை குழு மேற்கொள்ளவில்லை எனவும், முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கொடநாடு வழக்கில் கூடுதலாக சிலரை விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை என தெரிவித்துள்ளது.