காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரங்கள்... உடனடியாக நீக்க  டிஜிபி உத்தரவு...

காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரங்கள்... உடனடியாக நீக்க  டிஜிபி உத்தரவு...

தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. சில காவல் நிலையங்களில் உள்ள பெயர் பலகையை வைக்க தனியார் நிறுவனம் தானாக முன்வந்து நன்கொடை வழங்கி பெயர் பலகை வைக்கின்றனர். இதனால் அந்த பெயர் பலகைகளில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழக டி.ஜி. பி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் சில காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள தனியார் நிறுவனங்களின் பெயர்களால் மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுகிறது எனவும் அந்த தனியார் நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட காவல் நிலைய பெயர் பலகைகளை உடனடியாக அகற்றி புதிய பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காவல் நிலையங்களில் பெயர் பலகைகள் வைக்க காவல் நிலைய முன்பணத்தை செலவிட்டுக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.