எடப்பாடி பழனிச்சாமி சூழ்ச்சிக்காரர்; ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த தனியரசு!

எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு ஒற்றைத் தலைமை என்ற சூழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொங்கு இளைஞர் பேரவை கட்சியின் தலைவர் தனியரசு விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி சூழ்ச்சிக்காரர்; ஓபிஎஸ்ஸை சந்தித்து  ஆதரவு தெரிவித்த தனியரசு!

சென்னை பசுமை வழி சாலையில் வருகை தந்த தனியரசு ஓபிஎஸ்ஸை சந்தித்து  தனது ஆதரவைத் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியவர் ஓபிஎஸ் என்றும், ஆனால் எடப்பாடி சூழ்ச்சிக்காரர் என்றும் விமர்சனம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்றால் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இணைவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி ஒரு சாரார் போல செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டினர்.

முன்னதாக பேசிய  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் என எச்சரித்தார்.

இதனிடையே  திட்டமிட்டபடி ஜுன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஒற்றைத் தலைமைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்றார்.

ஆனால் ஓபிஎஸ் ஈபிஎஸ் இரண்டு பேருமே விலகி கொள்ள வேண்டும்  என்றும் மற்றவர்களுக்கு  வாய்ப்பு  கொடுக்க வேண்டும் எனவும்  முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.