புதுக்கோட்டை : பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்...!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டம் மூலம் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து, 100 தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை : பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்...!

அறந்தாங்கி தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

முதற்கட்டமாக அறந்தாங்கி பகுதியில், 100 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் இன்று தொடங்கப்பட்டது. பயிற்சியாளர் பிரியா மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த 12 நாட்கள் பயிற்சிக்கு பிறகு 100 தன்னார்வலர்களுக்கும், தலா 9 ஆயிரம் மதிப்புள்ள பேரிடர் காலமீட்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. 

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு அரசின் சார்பில் இலவச ஆயுள் காப்பீடும் பதிவு செய்து தரப்படவுள்ளது. நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சொர்ணராஜ், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மார்டின்லூதர்கிங், வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், வில்லியம்ஸ், ராஜா உள்ளிட்ட பயிற்சியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.