உச்ச கட்ட பரபரப்பில் எஸ்.பி.வேலுமணி..! இன்று வெளியாகிறது நீதிமன்ற தீர்ப்பு..!

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய எஸ்.பி.வேலுமணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
வழக்கு:
அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்தார். சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது.
ரத்து செய்யக் கோரி மனு:
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எஸ்பி வேலுமணியின் வீடு, ஒப்பந்ததாரர்கள், உறவினர்கள் என பலரது வீடுகளில் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதி பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் கடந்த 8-ம் தேதி விசாரித்தனர்.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கத்தின் ஆதாரம்:
எதிரான வாதம்:
அப்போது, டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டது என எஸ்.பி.வேலுமணி சார்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில், அறப்போர் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் ஆர்.சுரேஷ் ஆஜராகி ஒரே ஐபி முகவரியில், ஒரே இடத்தில் இருந்து டெண்டர்களை முன்னாள் அமைச்சருக்கு நெருங்கியவர்கள் விண்ணப்பித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், வேலுமணியின் பினாமியான ராஜன் சந்திரசேகருக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார்.
இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகின்றனர்.