ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்...!!

கச்சத்தீவு அருகே இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்...!!

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் கச்சத்தீவு பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த வஸ்தியான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மீது  இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதாக கூறப்படுகிறது..

இதனால் படகில் இருந்த 7 மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், இலங்கை கடற்படையினர் மோதி கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டுத்தருமாறு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் படகு உரிமையாளர் மனு அளித்துள்ளார்.

மேலும், வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்களிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படையினரின் செயலை தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.