தசரா திருவிழா கோலாகலம்... முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி...

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தசரா திருவிழா கோலாகலம்... முத்தாரம்மன் கோயிலில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி...

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் உள்ள முத்தாரம்மன் கோயிலில், கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்து அருள் பாலிக்கின்றார். ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து காப்புக்கட்டி, பல்வேறு சாமி வேடங்களை அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், தசரா குழுவினர் வீதி-வீதியாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி, காணிக்கை வசூலித்து வருவதால், தென் மாவட்டங்களில் தசரா திருவிழா களைகட்டியது. இந்நிலையில், தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். அப்போது, கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன், மகிஷாசூரனை வதம் செய்கிறார்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், குலசை தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனிடையே, கோவை மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா களைகட்டியுள்ளது. பல்வேறு வேடமணிந்த பக்தர்கள், சாமி சிலை முன்பு நடனமாடி உற்சாகம் அடைந்துள்ளனர்.