பிரதமருக்குபாதுகாப்பு சரியில்லை என்றால்...டெல்லியின் பாதுகாப்பு சரி இல்லை என்று கூறுகிறார்களா?

பிரதமருக்குபாதுகாப்பு சரியில்லை என்றால்...டெல்லியின் பாதுகாப்பு சரி இல்லை என்று கூறுகிறார்களா?

பிரதமருக்கு பாதுகாப்பு சரியில்லை என்று சொல்கிறார்கள் என்றால் டெல்லியில் இருக்கும் பிரதமரின் பாதுகாப்பு சரி இல்லை என்று கூறுகிறார்களா என்று தெரியவில்லை? என அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு டிகேஎஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை வந்த பிரதமர் மோடி:

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை மாதம் கோலாகலமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை தொடங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை புரிந்திருந்தார். 

குற்றம் சாட்டிய அண்ணாமலை:

இந்நிலையில், கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கடந்த ஜூலை மாதம் செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, அவருக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பணியில் இருந்து மாநில அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலை செய்யவில்லை எனவும், காவல் துறையினர் பழுதடைந்த கருவிகளையே பெயருக்காக வைத்திருந்தனர் எனவும் உரிய ஆதாரத்தின் அடிப்படையில், ஆளுநரிடம் இதை குற்றச்சாட்டாகத் தெரிவித்திருப்பதாக அண்ணாமலை கூறினார்.

பதிலளித்த டிஜிபி:

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் வருகையின்போது, பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை. நல்ல முறையில் பாதுகாப்பு இருந்தது. அதுதொடர்பாக எந்த தகவல் பரிமாற்றங்களும் கிடையாது. தற்போது இருப்பதிலேயே தமிழக காவல்துறை வசம்தான் நல்ல தரமான உபகரணங்கள் இருப்பதாக தெரிவித்த அவர், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது தவறான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார்.

அறிக்கை கேட்ட ஆளுநர்:

இதைத்தொடர்ந்து, பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பு தொடர்பாக அண்ணாமலை வழங்கிய புகார் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தலைமை செயலாளர் இறையன்புவிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

டி.கே.எஸ் பேட்டி:

இந்நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரதமரின் பாதுகாப்பு சரி இல்லையா?:

அப்போது பேசிய அவர், பிரதமர் தமிழகம் வந்துவிட்டு டெல்லி சென்று மீண்டும் தமிழகம் வர இருக்கும் நிலையில் தற்போது அவருடைய பாதுகாப்பு சரியில்லை என்று கூறுகிறார்கள்... பிரதமருக்கு பாதுகாப்பு என்றாலே, ஒரு வாரத்திற்கு முன்பாகவே டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் இங்கு வந்து பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு செல்வார்கள், அதன் பிறகு தான் பிரதமர் வருவார். இப்படி இருக்க கூடிய நிலையில், பாதுகாப்பு சரியில்லை என்று சொல்கிறார்கள் என்றால் டெல்லியில் இருக்கும் பிரதமரின் பாதுகாப்பு சரி இல்லை என்று கூறுகிறார்களா என்று தெரியவில்லை? எனவும், ஒரு வேளை பிரதமருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது ஏதேனும் வருத்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை எனவும் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு டி.கே.எஸ் இளங்கோவன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.