விளக்கம் கேட்கமால் நடவடிக்கை எடுப்பதா?- காய்த்ரி ரகுராம் கொந்தளிப்பு!

விளக்கம் கேட்கமால் நடவடிக்கை எடுப்பதா?- காய்த்ரி ரகுராம் கொந்தளிப்பு!

தன் தரப்பு விளக்கத்தை கேட்காமல் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக  நடிகை காய்த்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை ஆடியோ:

ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வமற்ற அந்த ஆடியோவில் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் தனது துறைக்கு கீழே கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது.

யாரிடம் வேண்டுமானால் போ:

சென்னையை சேர்ந்த மருத்துவரான டெய்சி சமீபத்தில்தான் பாஜகவில் சேர்ந்து பதவி பெற்றார். அந்த அதிகாரப்பூர்வமற்ற ஆடியோவில், டெய்சியை  நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது. உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது. சூர்யாவின் இந்த ஆடியோ இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேசமயம், அந்த ஆடியோ தொடர்பாக அவரும் இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள்:

இந்த சர்ச்சை ஆடியோ குறித்து, தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், புகார் எழுந்தபோது என்ன நடந்தது? நான் கோபமாக இருக்கிறேன். களப்பணி இல்லாமல் சிலர் ஜல்ட்ரா மட்டும் செய்தால் இதுதான் நடக்கும். திருச்சி சூர்யா & கோ அல்லது செல்வா & கோ மீண்டும் எங்களை ட்ரோல் செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சைக்கோ மூளையால் மட்டுமே முடியும். என் இரத்தம் கொதிக்கிறது. கட்சியை குறை சொல்ல வேண்டாம் என அனைவரையும் தாழ்மையான வேண்டுகோள். திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன்.. இந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை. என் ஆறுதல் மற்றும் ஆதரவு, என்று காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்து இருந்தார்

திருச்சி சூர்யாவிற்கு தடை!

இதையடுத்து, சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்து 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை. மேலும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, பாஜகவின் ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் எனவும்  தெரிவித்திருந்தார்.

காயத்ரி ரகுராமுக்கு தடை:

தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாலும் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கபடுவதாக  பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

விளக்கம் கேட்கமால் நடவடிக்கை எடுப்பதா?:

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், தன்னிடம், விளக்கம் கேட்கமால் சஸ்பெண்ட் செய்தது மன உளைச்சலை தந்துள்ளது எனவும், கட்சிக்கு  களங்கம் விளைவித்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தன் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு, பெண்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது தனது கடமை எனவும் அவர் தெரிவித்தார்.