தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு அதிகமாகவே உள்ளது பற்றாக்குறையே இல்லை... அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு அதிகமாகவே உள்ளது பற்றாக்குறையே இல்லை...  அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு அதிகமாகவே உள்ளது பற்றாக்குறையே இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ள 2386 வீடுகளுக்கு தன்னார்வலர் அமைப்புடன் இணைந்து மூன்று வேலை உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சரியான நேரத்தில் உணவு வழங்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவையில் தொற்று அதிகரித்திருக்கும் நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் கோவை இந்த ஆய்வை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். மேலும், தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் சிறப்பு அதிகாரிகள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.

சென்னையில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகள் காலியாக உள்ளன எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்த அமைச்சர், சென்னையில் படுக்கைகள் தேவை என்பது தற்போது இல்லை என குறிப்பிட்டார். தடுப்பூசி செலுத்துவதில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைவில் 26 லட்சம் தடுப்பூசியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெற இருப்பதாக கூறினார்.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது வரை 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது, 78 லட்சம் போடப்பட்டுள்ளது. தடுப்பூசியை தமிழகத்தில் போட்டுக்கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 6 ஆம் தேதி தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் இறுதி செய்யப்படும் என்ற அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஒரு நாளைக்கு 500 லிருந்து 550 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுகிறது. 100 மெட்ரிக் டன் வரையில் கையிருப்பு உள்ளதால் ஆக்சிஜன் பற்றாக் குறையே இல்லை என தெரிவித்தார்.