கீழ்நமண்டியில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்...!!!
கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 6ம் தேதி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது. 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் கீழடியில் 9 ம் கட்ட அகழாய்வு செய்ய தொல்லியல்த்துறை திட்டமிட்டது. இந்த நிலையில், கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் கீழ்நமண்டி அகழாய்வு பணிகளை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 6ம் தேதி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
கீழடி, அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9ம் கட்ட அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 8ம் கட்ட அகழாய்வில் 20 குழிகள் தோண்டப்பட்டு நீள் வடிவ தாயக்கட்டை, சுடுமண் பொம்மை, உறைகிணறுகள், இரு வண்ண பானைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில், சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட பெண்ணின் முகம், உறைகிணறுகள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பொருள்கள் கிடைத்தன. அதேபோல், கொந்தகை அகழாய்வு தளத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
இந்நிலையில், தமிழர்களின் பழம்பெருமையை வெளிக் கொணரும் விதமாக கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் அகழாய்வு பணிகளும் தொடங்கப்பட உள்ளது.
இதையும் படிக்க: சோதனையில் சிக்கிய கணக்கில் காட்டாத பொருள்....!!