சொத்து வரியை உயர்த்திய வழக்கு...! உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..!

சொத்து வரியை உயர்த்திய வழக்கு...! உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும், மாநகராட்சிகளின் தீர்மானங்களும் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 30 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30 ஆம் தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில், சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, அரசு தீர்மானிக்க முடியாது என வாதிடப்பட்டது.

மத்திய நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சொத்து வரியை கணக்கிட முறையான நடைமுறை  பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில், சென்னையில் 1998 ஆம் ஆண்டுக்கு பின் சொத்து வரி உயர்த்தப்படவில்லை எனவும், வரியை உயர்த்துவதற்கான அவசியம் குறித்தும் ஆவண ஆதாரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டது.

மொத்தவிலை குறியீடு, பணவீக்கம், சந்தை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், சொத்து வரி உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்த அரசுத்தரப்பு, கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்ட நடைமுறையை கடைபிடித்தே தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி, அது குறித்த ஆவணங்களையும் தாக்கல் செய்தது.

அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, மக்கள் நலத் திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக்காக  வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமாகிறது என்பதால் வரி விதிப்பை  வெளிப்படைத் தன்மையுடனும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த  பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, சொத்து வரியை உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த அரசாணையின் அடிப்படையில், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதற்கு   காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, சொத்து வரி உயர்த்துவது தொடர்பான அரசாணையையும், மாநகராட்சி தீர்மானங்களையும் செல்லும் எனக் கூறி தீர்ப்பளித்தார்.

அதேசமயம், சென்னையை பொறுத்தவரை சொத்துவரி செலுத்தும் 15 லட்சம் பேரில், 30 பேர் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் நீதிமன்றம் வந்திருக்காது எனத் தெரிவித்த நீதிபதி, ஆட்சேபங்கள் கோரி முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என அதிருப்தியை தனது உத்தரவில் பதிவு செய்துள்ளார்.

சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடைமுறையை குறை கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, 2022-23ஆம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டின் சொத்து வரியை செலுத்தக் கூறி மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்து, 2023-24ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த உத்தரவிட்டார். மேலும், சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  நாசி வழி செலுத்தும் கொரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்...!